தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பேரவைக் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் பேசியதாவது:

பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில்,

“பூச்சி முருகன் சாருக்கு ஒரு முறை கை தட்டுங்கள். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், எனக்கும், நாசர் சாருக்கும் ஈடுபாடு குறைவாக இருக்கும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும், 6 முதல் 8 பிரிவுகளில் இருக்கும் வாட்ஸ் – அப் குழுக்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, இவர்கள் வேலை செய்கிறார்கள். இது இவர்களிடம் நான் வியந்து பார்க்கும் விசயம்.
ஒவ்வொரு என் பிறந்தநாளுக்கும் புதிய கட்டிடத்தை பார்க்கும் போது மனதார சந்தோஷப்பட்டேன். கொரோனா பாதிப்பு, வழக்கு உள்ளிட்ட அனைத்தையும் பார்த்த போது, கட்டிடம் இருக்கும் பக்கமே போக வேண்டாம் என்று நினைப்பேன். அந்த பக்கம் போக வேண்டி இருந்தால் கூட, வேறு ஒரு பக்கமாக சென்று விடலாம் என்று தோன்றும். ஆனால், இன்று நம் கட்டிடத்தை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவிலேயே மிகச்சிறந்த கட்டிடமாக நடிகர் சங்கம் கட்டிடம் வரப்போகிறது.

ஒவ்வொரு வருடமும் நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் நான் சத்தியமாக சொல்கிறேன், 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நம் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும், இது சத்தியம். அதற்கான முயற்சிகள், வேலைகள் எல்லாமே போய்க்கொண்டு இருக்கிறது. அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உங்க அனைவருக்கும் நான் சொல்ல வேண்டியது ஒரே ஒரு விசயம் தான், நீங்க வைத்திருக்கும் நம்பிக்கை தான் நாங்கள். நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை மட்டும் அல்ல இது. நானும், கார்த்தியும் நிறைய முறை பேசும் போது, கட்டிடம் வந்தால் உதவி செய்வதற்கான நிதி அதிகரிக்கும் என்று பேசுவோம், அது நிச்சயம் நடக்கும்.

இந்த மேடையில் அமைந்திருக்கும் அனைவரும் உங்களுக்காக உழைக்கும் குடும்பம். இது ஒரே குடும்பம். நாங்க மேடையில் அமர்ந்திருப்பதும், நீங்க கீழே அமர்ந்திருப்பதும் சும்மா, இங்கு அனைவரும் சமம் தான். நீங்க தான் எங்களுக்கு பொறுப்பு கொடுத்து உட்கார வைத்திருக்கிறீர்கள், அதை ஏற்று நாங்கள் உங்களின் நன்மைக்காக பணியாற்றுகிறோம். ஒவ்வொரு முறையும் நடிகர் சங்கம் செல்லும் போது எங்கள் மனதில் ஒரு விசயம் தோன்றும். அது என்னவென்றால், நீங்கள் நலமாக இருக்க வேண்டும், எந்த மூலையில் இருந்தாலும், நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், என்ற எண்ணத்தில் தான் நாங்கள் வேலை செய்கிறோம். இந்த இடத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தது. தேவையில்லாத சம்பவங்கள் நடந்தது. இல்லை என்றால் கட்டிடம் என்றோ வந்திருக்கும்.
ஆனால் அந்த வேலையை பார்க்க விடாமல், வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை போனது எல்லாம் தேவையில்லாத விசயம். நம்ம கட்டிடத்தில் ஒரு சாக்கடை இருக்கும். எம்.ஜி.ஆர் ஐயா, சிவாஜி ஐயா, எஸ்.எஸ்.ஆர் ஐயா அவங்க காலத்தில் இருந்தே இருக்கிறது. அதன் வழியாக அனைத்து கெட்டவர்களும் வெளியே போயிட்டாங்க, நல்லவர்கள் மட்டும் இங்கு இருக்கிறார்கள்.

நீங்கள் அனைவரும் இங்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம். பல ஊர்களில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள், உங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பொதுச் செயலளாராக எப்போதும் உங்களுக்காக பணியாற்றுவேன்.” என்றார்.

மேலும், 2024-25 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வழக்கறிஞராக திரு.கிருஷ்ணா ரவீந்தர் அவர்களையும், தணிக்கையாளராக திரு.ஸ்ரீராம் அவர்களையும் உறுப்பினர்களின் ஒப்புதலோடு பொதுச் செயலாளர் விஷால் நியமித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *