”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்!

அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள்.

அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு.
திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான “ஹரா” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அதோடு திரை பிரபலங்கள் மைம்கோபி, சுரேஷ்மேனன் , அனுமோல், மொட்ட ராஜேந்திரன், வனிதாவிஜயகுமார், அனித்ரா, கவுஷிக் என ஏராளமான நட்சத்திரங்களுடன் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.
இவர் பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான கோடங்கி ஆபிரகாம் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விமர்சகர், பிரபல பத்திரிகையாளர் மகன் என்பதால் சிபாரிசு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைத்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள்…

பின் எப்படி “ஹரா” பட வாய்ப்பு கிடைத்த்து என அறிமுக நடிகர் சந்தோஷ் பிரபகரிடம் பேசினோம், “வணக்கம். அப்பா திரையுலகில் செய்தியாளராக இருந்தாலும் சிபாரிசு செய்வதை விரும்ப மாட்டார். “ஹரா” பட இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்கள் அலுவலகத்திற்கு ஆடீஷனுக்கு போய் சின்ன ரோலில் நடிக்க தேர்வானேன். எனக்கு “ஹரா” முதல் படமல்ல… நான் நடிக்கத் தேர்வானது இதே இயக்குனர் விஜய்ஸ்ரீஜியின் ”பப்ஜி” படத்திற்காக. அதில் மிகச்சிறிய வேடம். அதில் எனது நடிப்பை பார்த்து அதன் பின்னர்தான் “ஹரா” வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மோகன் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இதற்கு காரணமான இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்களுக்கு நன்றி.
ஹரா படம் சொல்லவேண்டிய கதை. இயக்குனர் விஜய்ஸ்ரீஜி மிக அழகாக எங்களை பயன் படுத்தி இருக்கிறார்.

இதோடு பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கதையின் நாய்கனாக நடித்து வருகிறேன். பொள்ளாச்சியில் முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அந்தப்படத்தை இயக்கி வருபவர் திரையுலகில் எல்லாருக்கும் அறிமுகமானவர்தான் என்றாலும் அவரின் அறிமுக படம் என்பதால் படத்தின் பெயரும், இயக்குனர் பெயரும் இப்போதைக்கு வேண்டாமே… என்றார் சிரித்துக் கொண்டே…

சரி சந்தோஷ் அந்த பெயரிடப்படாத படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என அடுத்த கேள்விக்கு போனோம்..
“பொன்வண்ணன் சார், மைம் கோபி சார், சத்யா அண்ணன் ஆகியோருடன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வெண்பா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இன்ஸ்டா பிரபலம் அஞ்சனா என் தங்கையாக நடித்து இருக்கிறார்.
அடுத்த கட்ட படப்பிடிப்பில் இன்னும் பல பிரபலங்கள் இணைய உள்ளனர். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும், கேட்கும் ஒரு சம்பவம்தான் இந்த படம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *