மதுரை மாட்டுத்தாணி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நர்சிங் படித்துமுடித்த மாணவிகளுக்குப் பட்டம் வழங்கிய அவர், தற்போதைய ஆசிரியர் – மாணவர்களின் எதார்த்த நிலை பற்றிப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, “கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து காவல்துறை ஒரு விசாரணைக் குழு அமைத்துள்ளது. நீதிமன்றம் இதைப் பற்றி கருத்து கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம்போல இனி ஒரு சம்பவம் எந்த ஒரு இடத்திலும் நடக்கக்கூடாது, நடைபெறவிடக்கூடாது.
தமிழக உளவுத்துறை பிரிவு தோல்வியடைந்ததாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, இந்த சம்பவத்தில் ஒரேயொரு பிரிவை மட்டும் குறை சொல்லக்கூடாது. என்ன நடந்தது எப்படி நடந்தது, திடீரென்று எப்படி வந்தார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
நிச்சயமாக, உளவுத்துறை முதலிலேயே தகவல் சொல்லி இருப்பார்கள். 32 ஆண்டுகளாக நான் காவல்துறையில் இருப்பதால், அது எனக்கு நன்றாக தெரியும். மாணவிகள் படிக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது நம் நோக்கமல்ல.
நம்மால் படிக்கமுடியவில்லை என்றாலும், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் நம்பிக்கையைவிடக்கூடாது, மனம் தளர்ந்து விடக்கூடாது.
பெற்றோர்கள் முதல் மதிப்பெண் எடுங்கள் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் கவனக்குறைவாக படிக்கிற மாணவர்களை புரிந்துகொண்டு சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும். மாணவர்களைத் திட்டுவதோ மற்ற மாணவர்கள் முன்பு திட்டியோ அவமானப்படுத்தக் கூடாது.
ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை உளவியல் முறைப்படி தெரிந்துகொண்டு, தங்களுடைய குடும்பத்தினர்போல பாவித்து செயல்பட்டால் நிச்சயமாக எந்த பிரச்னையும் இருக்காது” என்று குறிப்பிட்டார்.